குளத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளத்தூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பிரகாஷ் மற்றும் அருண் இடையே தகராறு ஏற்பட்டு கடந்த 6ஆம் தேதி இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனராம். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி மாணவர்கள் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர் பிரகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களான சக மாணவர்கள் கும்பலாக சேர்ந்து கடந்த 10ஆம் தேதி சக மாணவர்கள் சிலரை கல்லூரி அருகே வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த மாணவர்கள் ராஜேஷ்குமார், கருப்பசாமி ஆகிய இருவரும் குளத்தூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் மாணவர்கள் பிரகாஷ், அசோக்ராஜா, மணிராஜ், மாரி செல்வம், மாரிமுத்து, அந்தோணி, முனீஸ்குமார், செந்தில்குமார், சரவணன், பேச்சியப்பன், மாடசாமி என 11 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.