தூத்துக்குடியில் மார்ச் 23 இல் பாரம்பரிய உணவுத் திருவிழா தொடக்கம்

தூத்துக்குடியில் பாரம்பரிய உணவுத் திருவிழா மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் பாரம்பரிய உணவுத் திருவிழா மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
 தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து துறையின் சார்பில்,  பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் என். வெங்கடேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்தில் ஆட்சியர் என். வெங்கடேஷ் பேசியது:
தூத்துக்குடி ரோச் பூங்காவில் மார்ச் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பாரம்பரிய உணவுத் திருவிழா தினமும் மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது.  இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளும்,  தூத்துக்குடி மாவட்டத்தின் பிரபல உணவு வகையான மக்ரூன்,  முதலூர் மஸ்கோத் அல்வா,  கீழஈரல் சேவு,  கடம்பூர் போளி,  கோவில்பட்டி கடலைமிட்டாய் போன்ற உணவு வகைகள் திருவிழாவிலே தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
தூத்துக்குடியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களும் இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்று பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்து குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மகளிர் திட்டம்,  ஊட்டச்சத்து,  புதுவாழ்வு,  மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பாரம்பரிய உணவுகள்,  சிறுதானிய உணவுகள் தயாரித்து வழங்கப்படும்.
ரோச் பூங்காவில் பாரம்பரிய உணவுத் திருவிழாவுக்காக 38 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.  இதில்,  உடல் பரிசோதனை செய்ய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  சத்துணவுத் துறை மூலம் பல வகையான கலவை சாதம் தயார் செய்யும் முறைகள் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் மருத்துவத்தின் மகத்துவம் அறிந்து கொள்கின்ற வகையில்  சித்த மருத்துவ அரங்கம் அமைக்கப்படவுள்ளது.  இதில், இலவசமாக நிலவேம்புக் குடிநீர் மற்றும் பல்வேறு நோய்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட உள்ளது.  வேளாண்மைத் துறையின் மூலம் சிறுதானியங்கள், காய்கறிகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன்,  சார்- ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த்,  உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.சரவணன்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன்,  துணைஆட்சியர் (பயிற்சி) லாவண்யா,  உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சங்கர் விக்னேஷ்,  மகளிர் திட்ட அலுவலர் ரேவதி,  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ். முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com