தூத்துக்குடியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 ஆவது முறையாக தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 27 ஆம் தேதி காலை 8 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என ஆட்சியர் சந்தீப நந்தூரி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி இம்மாதம் 22 ஆம் தேதி போராட்டக் குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததை அடுத்து கடந்த 21 ஆம் தேதி இரவு 10 மணி முதல் 23 ஆம் தேதி காலை 8 மணி வரை தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டு 25 ஆம் தேதி பகல் 1 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, தூத்துக்குடியில் பதற்றம் நீடித்து வருவதால் இந்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப் பட்டுள்ளது. அதன்படி, 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி வரை தடை உத்தரவை நீடித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.