தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் தாமிரவருணி மஹா புஷ்கர விழா கணபதி ஹோமத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் உள்ள ஞான தீர்த்த படித்துறையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தாமிரவருணி மஹா புஷ்கர விழா முறைப்படி தொடக்கிவைக்கப்பட்டது. இதையொட்டி, ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு கோ பூஜையுடன் மஹா புஷ்கரம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, தாமிரவருணி நதிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. சிவா பட்டர் சிறப்பு பூஜைகளை நடத்தினார். பிறகு, அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தாமிரவருணி மஹா புஷ்கர விழா கமிட்டி தலைவரும், கோயில் பரம்பரை அக்தாருமான அ.ரா.க.அ. கருத்தப்பாண்டியன் நாடார், கமிட்டி துணைத் தலைவரும், ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவருமான தசரத பாண்டியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோல, ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்ட நல்லூர் கிராம மக்கள் சார்பில், ஏரல் தீர்த்தகரை அருள்மிகு சுந்தர விநாயகர் படித்துறையில் கணபதி ஹோமத்துடன் தாமிரவருணி மஹா புஷ்கர விழா தொடங்கியது. கோ பூஜை, நதிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ஏரல் சிவன் கோயில் சங்கர பட்டர் சிறப்பு பூஜைகளை நடத்தினார்.