தூத்துக்குடியில் தனியார் நிறுவன மேலாளரை கொல்ல முயன்ற வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (47). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். 2015ஆம் ஆண்டு அக்டோபரில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் (37) அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டாராம். தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விமல்ராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள் குற்றம்சாட்டப்பட்ட விமல்ராஜுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.