கோவில்பட்டி புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலயத்தின் 21ஆவது ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புளியங்குடி பங்குத்தந்தை அருள்ராஜ் ஆலயக் கொடியை ஏற்றி வைத்தார். பங்குத்தந்தையர் ஆவுடையானூர் தேவராஜன், கோவில்பட்டி அலாய்சியஸ் துரைராஜ், உதவி பங்குத்தந்தையர் பிராங்க்ளின், நாலாட்டின்புத்தூர் மிக்கேல், தலையால்நடந்தான்குளம் போஸ்கோ அடிகளார், விக்டர் அடிகளார் ஆகியோர் இணைந்து மறையுரை, திருப்பலி, நற்கருணை ஆசீர் வழங்கினர். இதில், பாளை. மறைமாவட்ட ஆயரின் செயலர் ஜேம்ஸ் ஸ்டாலின் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
2ஆம் நாளான சனிக்கிழமை (அக். 13) மாலை 6 மணிக்கு நவநாள் ஜெபம், உடையார்பட்டி ஆலயப் பங்குத்தந்தை ஜோமிக்ஸ், பாளை. பரிபாலகர் அப்போஸ்தலிக்க செயலர் ஜேம்ஸ் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை (அக். 14) மாலை 6 மணிக்கு நவநாள் ஜெபம், திருவிழா திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. பின்னர், ஆலயத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பரிசுத்த செல்வமாதா சொரூபத்துடன் திருஉருவ பவனியும், தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும். ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை, அருள்சகோதரிகள், பங்குப்பேரவையினர் செய்து வருகின்றனர்.