தாமிரவருணி மகா புஷ்கர விழாவின் 2வது நாளான வெள்ளிக் கிழமை ஸ்ரீவைகுண்டம் முறப்பநாடு, கருங்குளம், ஆழ்வார்திருநகரி தாமிரவருணி ஆற்றில் பக்தர்கள் நீராடி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள படித்துறை அருகே யாகசாலை அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு யாகமும், சங்கல்ப நீராடலும், காலை 7.30 மணிக்கு ஸ்ரீதுர்கா சொரூப பூஜை, ஸ்ரீசுயம்வர பூஜை, கலாபார்வதி ஹோமம் ஆகியவையும் நடைபெற்றன. காலை 10 மணிக்கு கோ பூஜை உள்ளிட்ட வழிபாடுகள், அபிஷேக, தீபாராதனை நடைபெற்றன. மாலை 6 மணிக்கு மகா ஆரத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முறப்பநாடு தாமிரவருணியில் மகா புஷ்கர விழாவையொட்டி, காலை 9 மணிக்கு அன்னதான விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
பின்னர், திருவாவடுதுறை ஆதின ஈசான மடத்தில் இருந்து சுவாமி நடராஜர் வீதி உலா நடைபெற்று. தொடர்ந்து, கைலாசநாதர் புஷ்கரம் கமிட்டி சார்பில் திருவாவடுதுறை ஆதினம் ஈசான மடத்துக்கு எதிரில் யாகசாலை நடைபெற்று, மாலை 5.30 மணிக்கு நதிக்கு மீண்டும் சிறப்பு ஆரத்தி காட்டப்பட்டது.
கருங்குளத்தில் உள்ள வித்யா கணபதி ஆலயத்தில் இருந்து தாமிரவருணி அன்னை படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தாமிரவருணி ஆற்றில் கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜை தொடங்கி, பூஜை முடிந்ததும் நதிக்கு 21 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் தாமிரவருணியில் நீராடினர்.