இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி உறவினர்கள் மனு

இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க

இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த அந்தோணி, ரூபின்சன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஜேசு, ஆரோக்கியம், கோரத்த முனியன், இசக்கிமுத்து ஆகிய 8 பேரும் ஒரு நாட்டுப் படகில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி பாம்பன் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், இலங்கை கடற்படை 8 மீனவர்களையும் கைது செய்து அவர்கள் சென்ற படகை பறிமுதல் செய்தது. புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 மீனவர்களும் நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தூத்துக்குடி மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினர் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 8 மீனவர்களுக்கும் மூன்று மாதம் சிறைத் தண்டனையும், தலா ரூ. 60 லட்சம் அபராதமும் விதித்து இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பான தகவல் தூத்துக்குடியில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி வடபாகம் நாட்டுப்படகு மீனவ பொது பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் இலங்கை சிறையில் உள்ள 8 மீனவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர். இலங்கை சிறையில் உள்ள 8 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மீதான சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com