குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழியில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தூத்துக்குடி இளைஞர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சரவணகுமார் (18). இவர், தூத்துக்குடியில் உள்ள உணவகத்தில் வேலைபார்த்து வந்தார். இவரும் இவரது நண்பர் விக்கியும் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடியில் இருந்து வந்துகொண்டிருந்தனர். கல்லாமொழி அருகே வந்தபோது வாகனத்தை முந்த முயன்றபோது சாலையோர மணலில் சிக்கி இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சரவணகுமார் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.