மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக கல்லூரிகளுக்கிடையேயான ஆண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு உள்பட்ட கல்லூரிகளுக்கிடையேயான ஹாக்கிப் போட்டி கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
இப்போட்டியில், தூய சவேரியார் கல்லூரி, தூய யோவான் கல்லூரி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன.
திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஹாக்கிப் போட்டியை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். அருணாசலம் தலைமை வகித்தார். கே.ஆர். கல்லூரி முதல்வர் கண்ணப்பன் போட்டியைத் தொடங்கிவைத்தார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி அணியும் மோதின. இதில் 4-க்கு 0 என்ற கோல் கணக்கில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெற்றி பெற்றது.
முன்னதாக நடைபெற்ற 3ஆம் மற்றும் 4ஆம் பரிசுக்கான போட்டியில் கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி அணியும், எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி அணியும் மோதின. இதில் 6-க்கு 0 என்ற கோல்கணக்கில் கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி அணியை எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி அணியினர் தோற்கடித்தனர்.
பரிசளிப்பு: பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். அருணாசலம் தலைமை வகித்தார். கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக உடற்கல்வித் துறைப் பேராசிரியர் துரை வெற்றிபெற்ற அணிக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.
ஏற்பாடுகளை, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ராம்குமார் தலைமையில், கல்லூரிப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.