திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவர் இறந்தார்.
கடையநல்லூரை அடுத்த புன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் திருமலை வேலுச்சாமி (62). இவர், தன் நண்பர் முத்தையாவுடன் (57) திருநெல்வேலியில் இருந்து பைக்கில் கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறை அடுத்த பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே, பைக் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதாம். இதில், திருமலை வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். முத்தையா பலத்த காயமடைந்தார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற கயத்தாறு போலீஸார் காயமடைந்தவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் அழகுலட்சுமணனிடம் (53) விசாரணை நடத்தி வருகின்றனர்.