சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீவண்டிமலைச்சி அம்மன் , ஸ்ரீவண்டி மலையான் சுவாமி கோயில் மற்றும் ஸ்ரீஅழகம்மன் கோயிலில் தசரா விழா நிறைவையொட்டி சனிக்கிழமை இரவு சப்பர பவனி நடைபெற்றது.
சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீவண்டிமலைச்சி , ஸ்ரீவண்டிமலையான் சுவாமி கோயிலில் தசரா விழா கடந்த 10ஆம்தேதி தொடங்கி சனிக்கிழமை வரை 11 நாள்கள் நடைபெற்றது.
விழாவையொட்டி தினமும் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் வேடமணிந்து வலம் வந்தனர். நிறைவு நாளான சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் சுவாமி தீச்சட்டி ஏந்தி நகர்வலம் வருதல் நடைபெற்றது.
நள்ளிரவு 1மணி அளவில் ஸ்ரீவண்டி மலைச்சி அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்தார். நகர் முழுவதும் வலம் வந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2மணி அளவில் சப்பரம் கோயிலை வந்தடைந்தது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சாத்தான்குளம் அருள்தரும் ஸ்ரீஅழகம்மன் கோயிலில் நடைபெற்ற தசரா விழாவையொட்டி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. நிறைவு நாளான சனிக்கிழமை ஸ்ரீஅழகம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து சுவாமி தீச்சட்டி ஏந்தி உலா வருதல், பக்தர்கள் கும்பம் ஏந்தி வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நள்ளிரவு 12மணிக்கு ஸ்ரீஅழகம்மன் அலங்கார பூஞ்சப்பரத்தில் எழந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நகர் வீதி உலா வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் சப்பரம் கோயிலை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.