விளாத்திகுளம் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் இயற்கையோடு இணைவோம் என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன.
வேம்பு நிறுவன இயக்குநர் ஆரோக்கியம் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ஞானபிரகாஷ், சத்திய சாமுவேல், அமலா, ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பிளாஸ்டிக்கை புறக்கணிப்போம், இயற்கையோடு இணைவோம் என்ற தலைப்பில் பேச்சு, பாடல், ஓவியம், கட்டுரை மற்றும் கண்காட்சிப் போட்டிகள் நடைபெற்றன.
விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பள்ளிகளைச் சேர்ந்த 110 மாணவ, மாணவியர் போட்டிகளில் கலந்துகொண்டனர். விளாத்திகுளம் அண்ணாமலை ரெட்டியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் ஒட்டுமொத்த சாம்பியன் பெற்று பரிசுக் கோப்பையை பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிறைவாக திருச்சி காவேரி மேம்பாட்டு நிறுவன இயக்குநர் அருள்மாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இயற்கையினை பாதுகாப்பதன் அவசியம் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் வேம்பு மக்கள் சக்தி இயக்க உறுப்பினர்கள் லிங்கேஸ்வரி, முரளிகுமார், விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முனீஸ்வரன் நன்றி கூறினார்.