கோவில்பட்டியில் கொட்டித் தீர்த்த மழை

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2  நாள்களாகவே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதலே வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது.  
இந்நிலையில்,  பிற்பகல் 3 மணிக்கு  வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியது. இதையடுத்து லேசான காற்று அடித்தது. அதனையடுத்து, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இம்மழை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. இதனால் கோவில்பட்டி, பாண்டவர்மங்கலம், இலுப்பையூரணி, இனாம்மணியாச்சி, திட்டங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  குறிப்பாக, கோவில்பட்டி பிரதான சாலை, பசுவந்தனை சாலை, பழனி ஆண்டவர் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.  தற்போது பெய்து வரும் மழையிலே கழிவுநீருடன் மழைநீர் சாலைகளில் ஓடுவதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஓடைகளில் உள்ள அடைப்புகளை முற்றிலும் அகற்றி வரும் மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்றும், மேலும் கோவில்பட்டி பிரதான சாலைகளில் கடைக்குள் நீர்புகுவதைத் தடுக்க ஓடைகளை தூர்வார வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 
பிரதான சாலையில் மழைநீர் தேங்குவதால் இருசக்கர வாகனத்தில் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கோவில்பட்டியில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையினால் இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளித்தன .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com