கழுகுமலை அருகே தாய், மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இரு தொழிலாளிகளை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கழுகுமலை திருப்பதி ராஜா தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் மனைவி ஜெயா(47). இவரது வீட்டருகே குடியிருந்து வருபவர் தர்மராஜ் மகன் கூலித் தொழிலாளி அருணாசலம்(48). கழுகுமலையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையினால் மழைநீர் செல்வதில் இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
அப்போது, அருணாசலம் மற்றும் அவரது உறவினர் பொன்னுச்சாமி மகன் கூலித் தொழிலாளி அண்ணாபாபு(42) ஆகிய இருவரும் ஜெயா மற்றும் அவரது மகள் மாலதி(21) ஆகிய இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த தாய், மகள் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஜெயா அளித்த புகாரின் பேரில், கழுகுமலை போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனர்.