பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர்களுக்கான 2018 ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு 2017 ஜனவரி முதல் புதிய ஊதிய உயர்வு உத்தரவை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.18ஆயிரம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத் தலைவர் மகேந்திரமணி தலைமை வகித்தார். தேசியத் தொலைத் தொடர்பு சம்மேளன பொருளாளர் முத்துசாமி, ஒப்பந்த ஊழியர் சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க உதவித் தலைவர் கணேசன், ஒப்பந்த ஊழியர் சங்க உதவிச் செயலர் மாணிக்கராஜ், தேசிய தொலைத் தொடர்பு சம்மேளனச் செயலர் கதிரேசன், ஓய்வூதியர் சங்கச் செயலர் முத்துராமலிங்கம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், ஒப்பந்த ஊழியர் சங்கச் செயலர் பாலசிங், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கச் செயலர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த தங்கமாரியப்பன், ஹரிஹரமகாலிங்கம், ஜாஹீர்உசேன், ரஜினிகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.