திருச்செந்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருச்செந்தூர் அருகேயுள்ள இராணிமகராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சிவராஜகுமார் (35). இவர் திருச்செந்தூர் பந்தல் மண்டபத்தில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 4-ஆம் தேதி இரவு வேலை முடிந்து பைக்கில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். கோயில்விளை பகுதியில் வரும் போது எதிரே வந்த வாகனம் சிவராஜகுமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அதிகாலை ரோந்து வந்த ஊர்க்காவல் படையினர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். விபத்துகுறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் தி.ரெகுராஜன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.