கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் எட்டயபுரம் பாரதியார் நினைவு நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எட்டயபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு, கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் பாபு தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் தேவராஜ் பாண்டியன், ராணி, ரோட்டரி சங்கச் செயலர் ரவி மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில், தற்கொலைக்கு எதிராக மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து தற்கொலை தடுப்பு குறித்த கருத்தரங்கில் மாணவிகள், ஆசிரியர்கள் பேசினர். மாணவிகளுக்கு தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கப் பொருளாளர் பால்ராஜ், உறுப்பினர்கள் முத்துமுருகன், மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டியில்...
கோவில்பட்டி, செப். 11: உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமை வகித்தார். மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் பூவேஸ்வரி முன்னிலை வகித்தார். மனநல மருத்துவர்கள் சுவாதி லட்சுமி, நிரஞ்சனாதேவி ஆகியோர் தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில், மருத்துவர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட மனநல திட்டப் பணியாளர் சேது வரவேற்றார். மனநல சமுகப் பணியாளர் பெரியசாமி நன்றி கூறினார்.