கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை, இலுப்பையூரணி மற்றும் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள சுரங்கப் பாதையில் மழைக் காலங்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற வலியுறுத்தி பாஜகவினர் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக நகரத் தலைவர் வேல்ராஜா தலைமையில், மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பாலு, லட்சுமணக்குமார், காளிராஜ், நீதிப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், கோட்டாட்சியர் விஜயாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி, தங்கள் கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.