தூத்துக்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற பாரதியார் நினைவு தின விழா மற்றும் குடியரசு தினவிழா விளையாட்டுப் போட்டிகளில், ஆண்கள் பிரிவில், தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் பெண்கள் பிரிவில் ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
தூத்துக்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளி சார்பில் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானம் மற்றும் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மைதானம் ஆகியவற்றில் நடைபெற்றது.
ஆக. 27ஆம் தேதி முதல் செப். 6ஆம் தேதி வரை குழு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர், மாணவிகளும் கலந்துகொண்டனர்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளியின் தலைவர் டாக்டர் அஷ்ரப் தலைமை வகித்தார். உதவித் தலைவர் அக்பர் ஷா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் செய்யது அகமது வரவேற்றார்.
வெற்றிபெற்ற மாணவர், மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா பரிசுகளை வழங்கிப் பேசினார்.
தடகளப் போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று ஆண்கள் பிரிவில் தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், பெண்கள் பிரிவில் தூத்துக்குடி ஹோலிலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
விழாவில், திருச்செந்தூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் லட்சுமணப்பெருமாள், சிவந்தி அதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி, எல்.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மீனா சேகர், சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆர். சண்முகானந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை எல்.கே.மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆனந்தகூத்தன், அகமது முஸ்தபா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.