தூத்துக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் பெண் அரசு ஊழியர் சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்த செந்தில்குமார் மனைவி தமிழ்ச்செல்வி (49). இவர், தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் தட்டச்சராக வேலைபார்த்து வந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை.
தனியாக வசித்து வந்த தமிழ்ச்செல்வியின் வீடு கடந்த இரண்டு நாள்களாக பூட்டிய நிலையில் காணப்பட்டதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார், அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தமிழ்ச்செல்வியின் முகம் பாலிதீன் பையால் சுற்றப்பட்ட நிலையில், கழுத்தில் கயிறு இறுக்கியவாறு இறந்து கிடந்தார்.
இதையடுத்து, தமிழ்ச்செல்வியின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் காணப்பட்ட தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும், அவரது சாவில் சந்தேகம் ஏதும் உள்ளதா என்ற அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.