தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிலக்கரி தூசியை கட்டுப்படுத்த ரூ. 2.16 கோடியில் பனித்துளி தெளிப்பான் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கில் இருந்து லாரிகளில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் போது ஏற்படும் தூசியை கட்டுப்படுத்துவதற்கு துறைமுக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், ஏறத்தாழ 100 மீட்டர் தொலைவுக்கு பனித் துளியை பீய்ச்சியடிக்கக் கூடிய திறன் கொண்ட வாகனத்துடன்கூடிய புதிய தெளிப்பான் ரூ. 2.16 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வாகன அமைப்புடன் கூடிய பனித்துளி தெளிப்பாளை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ரிங்கேஷ் ராய் தொடங்கிவைத்தார். துணைத் தலைவர் நா. வையாபுரி, சிறப்பு அலுவலர் விஷ்ணு, தலைமை இயந்திரவியல் பொறியாளர் சுரேஷ் பாபு, போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன், நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி எஸ். சாந்தி, துணை பாதுகாப்பு அதிகாரி கேப்டன் பாபேடோஸ் சந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.