பிரணாப் முகர்ஜி தூத்துக்குடி வந்தபோது கருப்புக் கொடி காட்டிய வழக்கில் மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட 83 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
தூத்துக்குடியில் கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி புதிய அனல் மின் நிலைய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டியதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட 83 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தூத்துக்குடி இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிஸ்மிதா, குற்றம்சாட்டப்பட்ட வைகோ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 83 பேரையும் விடுதலை செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.