கழுகுமலையில் ரூ. 83.50 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட காவலர் மற்றும் தலைமைக் காவலர் குடியிருப்புக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
கழுகுமலை காவல் நிலையம் அருகேயுள்ள இடத்தில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில், ரூ. 83.50 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 2ஆம் தளம் என 2 தளத்துடன் தலா 2 வீடுகள் வீதம் 6 வீடுகள் கட்டும் பணி 2017 ஏப்ரல் 7இல் தொடங்கியது. அதற்கான கட்டுமானப் பணி முடிவுற்று தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில், புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்புக் கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா ஆலோசனையின்பேரில், கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ் மேற்பார்வையில், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி குத்துவிளக்கு ஏற்றினார். தலா 650 சதுரடியில் 6 வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், உதவி ஆய்வாளர்கள் சவரியம்மாள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ரவீந்தர், மாரியப்பன் மற்றும் போலீஸார் கலந்துகொண்டனர்.