கிராமத்தில் மோதல்களை ஏற்படுத்தும் மதபோகர் மீது வழக்குப் பதியக் கோரி தட்டார்மடம் காவல் நிலையத்தில் காந்திபுரி கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கபத்தில் கிறிஸ்தவ சபை நடத்தி வரும் மதபோதகர், காந்திபுரிக்கு வெள்ளிக்கிழமை சென்று அங்குள்ள ஒரு வீட்டில் பிரசங்கம் செய்தாராம். இதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலர் பெ. சக்திவேலன் தலைமையில், பாஜக மாவட்ட துணைத் தலைவர் எஸ்.செல்வராஜ் உள்பட கிராம மக்கள் 30 பேர் சனிக்கிழமை திரண்டு வந்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.
பின்னர் மத போதகர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது அங்கு வந்த முரளிரம்பாவிடமும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். எஸ்பி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி. உறுதி அளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.