கோவில்பட்டியையடுத்த ஊத்துப்பட்டியில் வனத் துறையைக் கண்டித்து சனிக்கிழமை அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஊத்துப்பட்டியில் மான் ஒன்று நாய் கடித்து இறந்ததையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சுமை ஆட்டோ ஓட்டுநர் திருப்பதி (33), வேல்சாமி(29) ஆகியோர் சுமை ஆட்டோவில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்த பின்பு, மீண்டும் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனராம்.
அதற்கான வண்டி வாடகை கேட்டபோது, அவர்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது வனத்துறையினர் தாக்கியதில் திருப்பதி காயமடைந்தாராம்.
இந்நிலையில், வனத்துறை ஊழியர்களின் போக்கை கண்டித்தும், சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் பாபு தலைமையில், நகர உதவிச் செயலர் முனியசாமி, கிளைச் செயலர் ராமகிருஷ்ணன் மற்றும் ஊத்துப்பட்டி பகுதி பெண்கள் வனத் துறை அலுவலகத்தில் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் காவல் ஆய்வாளர் ஜூடி போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.