தூத்துக்குடி- மைசூரு இடையே இயக்கப்படும் விரைவு ரயிலின் வேகத்தை அதிகரித்து அதிவேக ரயிலாக அறிவிக்க வேண்டும் என மாவட்ட பயணிகள் நலச் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கக் கூட்டம், தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. செயலர் பிரம்மநாயகம், பொருளாளர் லட்சுமணன், துணைத் தலைவர்கள் நம்பிராஜன், மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளராக நகர வர்த்தக மத்திய வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் செளந்திரபாண்டியன் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தின்போது, தூத்துக்குடி-திருநெல்வேலி இடையே தடம் எண்: 150 கொண்ட பேருந்துகளை அதிகளவு இயக்க வேண்டும், திரேஸ்புரம்-மட்டக்கடை, புதிய பேருந்து நிலையம் என்ற வழித்தடத்தில் நகரப் பேருந்துகள் இயக்க வேண்டும், மைசூரு விரைவு ரயிலின் வேகத்தை அதிகரித்து அதிவேக ரயிலாக அறிவிக்க வேண்டும். அந்த ரயில் தூத்துக்குடியை தினமும் காலை 9.30 மணிக்கு வந்தடையும் வகையிலும், மாலை 5.30 மணிக்கு புறப்படும் வகையிலும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.