அரியலூர் மாவட்டம், செந்துறையில் டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறையில் அரசு மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. பள்ளிகள், வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் இந்தப் பகுதியில் உள்ளதால், இந்தப் பகுதி எப்போதும் மக்களின் நடமாட்டம் மிகுந்ததாகக் காணப்படும். இதனால், இந்த கடையை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துவந்தனர்.
தற்போது, நெடுஞ்சாலை மதுக்கடைகள் அகற்றப்பட்டதால், செந்துறை மதுக்கடையில் முன்பைவிட அதிகக் கூட்டம் காணப்படுகிறது. இதனால், பெண்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் இதுகுறித்து அப்பகுதி பெண்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், வெள்ளிக்கிழமை கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் அமுதா அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஒரு வாரத்துக்குள் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்த பொதுமக்கள், இல்லையென்றால் தாங்களே கடையை அகற்றிவிடுவதாகத் தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.