அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடக் கோரி, ஆதனக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு 13 ஊர் கிராம மக்கள் சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய சிமென்ட்ஸ் ஆலைக்கு சொந்தமான ஆர்ட்டீசியன் ஊற்றெடுக்கும் கோட்டைக்காடு சுரங்கத்தை நிரந்தரமாக மூடி நிலத்தடி நீரினை பாதுகாக்க வேண்டும். ஆலத்தியூர் வடக்கு, புதுப்பாளையம், ஆதனக்குறிச்சி, துளார், மணக்குடையான் ஆகிய கிராமங்களில் காலாவதியான சுரங்கங்களை மூடி, மேய்ச்சல் நிலமாக மாற்ற வேண்டும்.
சுரங்க விதிப்படி சுரங்கத்தைச் சுற்றி 33 சதவீத பகுதியை பசுமைப் பகுதியாக மாற்ற வேண்டும்.
ஆலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் குழந்தைகளுக்கு சிமென்ட் ஆலை பள்ளியில் நிர்பந்தம் அல்லாத சேர்க்கை, இலவச கல்வி மற்றும்
இலவச பேருந்து வசதி வழங்கிட வேண்டும்.
சுரங்க செயல்பாட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்த நிலையில், சுரங்க பகுதியின் அனைத்து விவசாயிகளுக்கும் போர்வெல் அமைத்து பாசன வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில், ஆலத்தியூர், தெத்தெரி, முள்ளுக்குறிச்சி, ஆதனக்குறிச்சி, முதுகுளம், புதுப்பாளையம், தாமரைப்பூண்டி, சோழன்பட்டி, மணக்குடையான், மருங்கூர், இருங்களாக்குறிச்சி, துளார் மற்றும் பெரியாக்குறிச்சி ஆகிய கிராம மக்கள் பங்கேற்றனர்.