எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சிறப்பு இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் முகாமை தொடக்கி வைத்தார். ஜயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார்.
முகாமில், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் இளவரசன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்று பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளித்தனர். இதில், 94 கர்ப்பிணிகள் உள்ளிட்ட 648 பேர் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 14 பேர் கண்புறை நோய் அறுவைச் சிகிச்சைக்கும், இருதய நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட 25 பேரில் 13 பேர் இருதய அறுவைச் சிகிச்சைக்கும், தீவிர பல் சிகிச்சைக்காக 4 பேரும், பிற நோய்களுக்காக 30 பேரும் தீவிர சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் செல்வராஜன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் டினாகுமாரி, வட்டாட்சியர் திருமாறன், நகராட்சி ஆணையர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி வரவேற்றார். வட்டார தலைமை மருத்துவ அலுவலர் லட்சுமிதரன் நன்றி கூறினார்.