கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.
கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.
அரியலூர் நகரிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமானூரை அடுத்த கரைவெட்டி பறவைகள் சரணாலயம். 454 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்துக்கு மத்திய ஆசியா, திபெத், வடக்கு ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பறவைகள் வந்து செல்கின்றன. அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை இந்தப் பறவைகள் இங்கு தங்கி செல்கின்றன.
பகல் நேரங்களில் அருகில் உள்ள வயல்களில் சிதறிக் கிடக்கும் நெல்மணிகளை தேடிச் செல்லும் பறவைகள். மாலை வேளையில் சரணாலயத்திற்கு வந்துவிடுகின்றன.
அதனால் பகல் பொழுதில் வெறிச்சோடி காணப்படும் இந்த சரணாலயம், மாலை வேளையில் கண்களுக்கு இதமாக காட்சியளிக்கிறது. உரிய காலத்தில் 100-க்கும் மேற்பட்ட வகையான நீர்ப்பறவைகளும் 37 வகையான நிலப்பறவைகளும் வந்து செல்கின்றன.
இங்கு வரும் பறவையினங்களில் கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிரும் அரிவாள் மூக்கன், சாம்பல் நிற கொக்கு, மைல் கால் கோழி, ஆலா, கரண்டி மூக்கன், நத்தை கொத்தி நாரை, பாம்பு நாரை, கொசு உல்லான், சிறிய கொக்கு, முக்குளிப்பான், வண்ண நாரை, மடையான், உண்ணி கொக்கு, நாமக்கோழி, நீர்காகம் உள்ளிட்டவை நீர்வாழ் பறவைகள் அடங்கும்.
மேலும், ஆள்காட்டி குருவி, பருந்து, சிட்டு, வேதவால் குருவி, மஞ்சள் குருவி, மஞ்சு திருடி, மரங்கொத்தி பறவை, மைனா, புறா, மணியன் காக்கா, அண்டங்காக்கா, மயில், கல் குருவி, நாராயணபட்சி ஆகிய நிலவாழ் பறவைகளும் இங்கு வந்து செல்கின்றன.
இப்பறவைகள் இங்கு தங்கியிருக்கும் காலத்தில் அவற்றுக்குப் போதுமான உணவு வகைகள் எப்போதும் கிடைக்கிறது என்பதே இப்பறவைகளின் வருகைக்கு முக்கியக் காரணம். பல ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்தும் இங்கு வரும் பறவைகள், இங்கேயே தங்கிவிடுவதும் உண்டு. அதிகபட்சமாக 50,000 பறவைகள் ஒராண்டில் வந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு வந்து செல்லும் ஒவ்வொரு வகையான பறவைக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. திபெத் மற்றும் லடாக் பகுதியில் இருந்துவரும் வரித்தலை வாத்து அதிக உயரத்தில் பறக்கும் நீர்ப்பறவையாகும். பாம்பு நாரை எனும் பறவை தண்ணீரில் மூழ்கினால் இரையோடுதான் மேலே வரும். இப்படி ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இங்கு வரும் சிறைவி எனும் பறவையினங்கள் அருகில் உள்ள வயல்வெளிகளுக்குச் சென்று நெல் போன்ற விவசாய பயிர்களை சேதப்படுத்தி விடுவதாக விவசாயிகள் ஆதங்கப்பட்டனர்.
ஆனால் இன்று விவசாயிகளுக்கு இப்பறவையினங்கள் பலன் தரும் நண்பர்களாக மாறியுள்ளன.
இந்த சரணாலயத்தில் இருக்கும் பறவைகளின் எச்சங்கள் தண்ணீரில் கலந்து, அந்த தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதால், நல்ல விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com