திருமானூர் அருகேயுள்ள கீழகொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதி செய்து தர வேண்டும் என நுகர்வோர் விழிப்புணர்வு சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருமானூரில் அண்மையில் நடைபெற்ற அச்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
திருமானூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு, இருக்கையுடன் நிழற்குடை அமைக்க வேண்டும். அரியலூரிலிருந்து கீழப்பழுவூர் வழியாக புள்ளம்பாடிக்கு மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமானூரில் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அச்சங்கத் தலைவர் வரதராசன் தலைமை வகித்தார்.நிர்வாகிகள் ரங்கசாமி,தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக செயலர் கணேசன் வரவேற்றார்.