பட்டம் அறிந்து பயிரை விதைத்தால், அதிக மகசூல் பெற முடியும் என்றார் சோழமதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஜாஜோஸ்லின்.
இதுகுறித்து அவர் அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள்.
ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், மற்றும் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவற்றை சாகுபடி செய்வார்கள்.
இதேபோல், மார்கழிப் பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வர். ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை செய்யலாம்.மீதிப் பாதி நிலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்யலாம்.மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய ஆண்டு சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும், சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வர்.
நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. அதனால் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மாறாக கிருமிகளை அழிக்கின்றன.குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறொரு பயிர் செய்தபின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை. இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன.
அந்தந்த பட்டத்தில் அதற்குரிய பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து பயன்பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.