அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மனைவியை கொடுமைப்படுத்தியதாக கணவர், மாமனார், மாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
ஜயங்கொண்டம் அருகே உள்ள சிந்தாமணி கிராமம், காலனி தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் பிரசாந்த்குமார் (36). இவருக்கும் அணைகுடம் காலனி தெருவை சேர்ந்த காசிநாதன் மகள் ஜான்சிராணிக்கும் (31) பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஜான்சிராணி மூன்று பெண் குழந்தைகளை பெற்றதால், அவரது கணவர் பிரசாந்த் குமார், மாமணார் அன்பழகன் (55), மாமியார் ராஜகுமாரி(50) ஆகியோர் அவரை துன்புறுத்தி வந்தனராம்.
இதனால், கடந்த ஜூன் 26 அன்று வீட்டை விட்டு சென்ற ஜான்சிராணி வீட்டுக்கு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் செல்வராணி மகள் காணாமல்போனதாக தா.பழூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீஸார் வழக்குப் பதிந்து ஜான்சிராணியை தேடிவந்தனர்.
இந்நிலையில், ஜான்சிராணி 2 நாள்களுக்கு முன் சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் தன்னை கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் துன்புறுத்துவதாக புகார் அளித்தார்.
இதையடுத்து, பிரசாந்த்குமார், அன்பழகன், ராஜகுமாரி ஆகிய மூன்று பேரையும் சனிக்கிழமை இரவு தா.பழூர் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.