அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தில் வாட் வரிவிதிப்பில் இருந்து 3,500 வணிகர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு மாறியுள்ளனர்கள் என்றார் கரூர் மாவட்ட வணிகவரித்துறை உதவி ஆணையர்(தணிக்கை) பி. பிரியா.
அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி வரி குறித்த வணிகர்களுக்கான கருத்தரங்கில் அவர் பங்கேற்று, ஜிஎஸ்டி-யில் செயல்படுத்தப்படும் வரிவிகிதங்கள், ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படும் பொருள்கள், வரிக்கான ஆவணங்கள் எவ்வாறு தாக்கல் செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அவர் பேசியது:
வணிவரித்துறை மூலம் மாவட்டம் தோறும் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு சரக்கு மட்டும் சேவை வரிவிதிப்பு குறித்த கருத்தரங்கள் நடைபெற்று வருகிறது. துறைச்சார்ந்த அதிகாரிகளுக்கு ஜிஎஸ்டி குறித்த முழுமையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சரகங்கள் தோறும் உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படுகிறது.
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தில் வாட் வரிவிதிப்பில் இருந்த 3,500 பேர் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு மாறியுள்ளனர். தற்போது வரை 78 மனுக்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்காக ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 67 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வணிகர்கள்,வியாபாரிகள்,தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வரிவிதிப்பு குறித்து ஏற்படும் சந்தேகங்களை வணிகவரி அலுவலகத்தில் எப்போது வேண்டுமானாலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார் பி.பிரியா.
நிகழ்ச்சியில் கரூர் வணிகவரித்துறை உதவி ஆணையர்(தெற்கு) செளந்தரபாண்டியன், அரியலூர் உதவி ஆணையர் வனிதாமணி, வணிகவரி அலுவலர் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஜி.எஸ்.டி குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.
இதில், அரியலூர்- பெரம்லூர் மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், தனிக்கை துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.