அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே குடிநீர் கோரி தேளூர் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேளூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பொதுக்குழாய்களில் குடிநீர் வரவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை திருச்சி - சிதம்பரம் சாலை, தேளூர்-கயர்லபாத் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
தகவலறிந்து கயர்லாபாத் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, அனைவருக்கும் சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.