அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தில் உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி 2-ஆவது நாளாக கிராம மக்கள் செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுத்தமல்லி கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் உள்ள அரசு மதுக்கடையால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் இக்கடையை அகற்றகோரி நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் அக்கடை தொடர்ந்து அப்பகுதியில் செயல்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கடையை மூடக்கோரி செவ்வாய்க்கிழமையும் அந்தக் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அரியலூர் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கரநாராயணன் உள்ளிட்ட போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்திற்குள் கடையை மூட உறுதியளித்தனர். ஆனால் உடனடியாக கடையை மூட வலியுறுத்தி அந்தக் கடையைத் திறக்க விடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.