60 வயது நிரம்பிய அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற அச்சங்க பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
விவசாயிகளின் தற்கொலையை தடுத்திட விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவேண்டும். 50 சதவீத மானியத்தில் விவசாய இடுபொருள்கள் வழங்கிட வேண்டும். 60-வயது நிரம்பிய அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். புள்ளம்பாடி வாய்க்காலை தூர்வார வேண்டும். மணல் கொள்ளையை தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, அச்சங்க மாவட்டத் தலைவர் மணியன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் புனிதன்,கரும்பு விவசாயிகள் சங்கச் செயலர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ச் செயலர் செல்லத்துரை, மாவட்ட துணைத் தலைவர் பிச்சைப்பிள்ளை, மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன் , இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிரணிச் செயலர் மாரியம்மாள், மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில துணைத் தலைவர் முகமது அலி பங்கேற்று சிறைப்புரையாற்றினார். முன்னதாக ஒன்றியச் செயலர் வரப்பிரசாதம் வரவேற்றார்.