தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
திருமானூரில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றியக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். பொதுமக்கள் விவசாயிகள், மின்சார குறை தொடர்பாக கொடுக்கும் புகார்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திருமானூர் மின்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரையும் இடமாற்றம் வேண்டும். கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு ஒன்றிய துணைச் செயலர் கலியபெருமாள் தலைமை வகித்தார். துணைச் செயலர் பன்னீர்செல்வம், விவசாய சங்க நிர்வாகி பரிசுத்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலர் ஆறுமுகம்,கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து பேசினர். முன்னதாக சாமிநாதன் வரவேற்றார்.