அரியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கடுப்படுத்துதலுக்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் எஸ்.தனசேகரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
அரியலூர் மாவட்டத்தில் தீவிர வயிற்றுப்போக்குக் கட்டுப்பாட்டு முகாம் ஜூலை 1-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஐந்து வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உப்பு சர்க்கரை பொட்டலம் வழங்கப்படும். அத்துடன் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 14 நாள்களுக்கு மாத்திரை வழங்கப்படும்.
அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் உப்புச் சர்க்கரை கரைசல் பொட்டலம் வழங்கப்படவுள்ளது.
இம்முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் உள்ள அனைத்து வீடுகளுக்கும் உப்பு சர்க்கரை பொட்டலம் வழங்கினர். இந்த முகாம் மூலம் 63,005 குழந்தைகள் பயன் பெற உள்ளனர் என்றார் அவர்.முகாம் தொடக்க நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ. மதியழகன், அரியலூர் நகராட்சி ஆணையர் வினோத், அரியலூர் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.