தெளிப்பு நீர் பாசன கருவிகளுக்கு மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்டத்தில் மானியத்தில் தெளிப்பு நீர் பாசன கருவிகள் வாங்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர் மாவட்டத்தில் மானியத்தில் தெளிப்பு நீர் பாசன கருவிகள் வாங்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 1110 மெ.டன் யூரியா, 461 மெ.டன் டி.ஏ.பி, 494 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 831 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் போதுமான அளவில் இருப்பில் உள்ளது. இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் வேளாண் விரிவாக்க மையம் மூலம் 277 மெ.டன், கூட்டுறவுத்துறை மூலம் 13 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 70 மெ.டன் என கூடுதலாக 360 மெ.டன் விநியோகம்  செய்யப்பட்டுள்ளது.
தற்போது வேளாண் விரிவாக்க மையங்களில் 19 மெ.டன், கூட்டுறவுத் துறையில் 21 மெ.டன் மற்றும் தனியார் கடைகளில் 2 மெ.டன் ஆக மொத்தம் 42 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது.
தற்போது பருவமழை குறைவாக கிடைத்து வருவதால் நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் வேளாண் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத் துறைகள் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகளை அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியமாக மாவட்டத்திற்கு ரூ.7.47 கோடி நிதி இலக்கு ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது.
சிறு, குறு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் பாசன கருவிகளை தங்களது வயல்களில் நிர்மாணித்துக் கொள்ள மானியம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. 75 சதவீத மானியத்தில் பயன்பெறும் இதர விவசாயிகள் மீதிப் பங்குத் தொகையை வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
சிறு,குறு ஆதிதிராவிட விவசாயிகள் வருவாய்த் துறையில் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.  
இத்திட்டத்தின்கீழ், விவசாயிகள் பயன்பெற சொந்த நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருவதற்கான சிட்டா மற்றும் அடங்கல், வயல் வரைபடம் மற்றும் மின் இணைப்புடன் நீர் ஆதாரம் உள்ளமைக்கான சான்றுகளுடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற இதர ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெற அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com