போலீஸ்-பொதுமக்கள் நட்புறவு சங்கம் சார்பில், விளையாட்டுப் போட்டிகள் ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டிகளுக்கு ஜயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் இனிகோதிவ்யன் தலைமை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் முத்துகுமார் முன்னிலை வகித்தார். போட்டிகளை காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
இதில் 200 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டபந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் போலீஸார் பலர் கலந்து கொண்டனர். நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் பாலமுருகன், விஜயானந்தன், அசோக்குமார், மணி ஆகியோர் செயல்பட்டனர். வெற்றிப் பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மாலையில் நடைபெற்றது, வெற்றிப் பெற்றவர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் இனிகோதிவ்யன் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
முன்னதாக, போலீஸ்-பொதுமக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் முகமதுரபீக் வரவேற்றார். இறுதியில் சங்க ஆலோசகர் வழக்குரைஞர் மாசிலாமணி நன்றி கூறினார்.