அரியலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெளியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் வெளியே வரத் தயங்கினர். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை மாவட்டம் முழுவதும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.
ஜயங்கொண்டம், தா.பழூர்,செந்துறை,பொன்பரப்பி,திருமானூர்,ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இடி,மின்னலுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
இடி தாக்கி பெண் சாவு: செந்துறை பகுதியில் இடி,மின்னலுடன் மழை பெய்தபோது வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த செந்துறை அருகேயுள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை (59), சாலையோர புளியமரத்துக்கு அடியில் ஒதுங்கினார். அப்போது, இடி தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தார். சம்பவம் குறித்து இரும்புலிக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.