ஜயங்கொண்டம் அருகே பெண்ணை கடத்தி இரண்டாவது திருமணம் செய்ய முயன்றவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மீன்சுருட்டி அருகே உள்ள வாணவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசாமி மகன் கண்ணன் (எ) கலியபெருமாள் (32). கூலித் தொழிலாளியான இவருக்கும், கோடாலிகருப்பூர் கிராமம், கோவிந்தராஜ் மகள் ரேவதிக்கும் (28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, இருவரும் மாமனார், மாமியார் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தையில்லை.
இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த மைசூரில் ஆசிரியராகப் பணிபுரியும் ராமதாஸ் மனைவி ரேணுகாவுடன் (29) கடந்த 3 ஆண்டுகளாக கலியபெருமாளுக்கு பழக்கம் இருந்துவந்ததாம். இதனால், மனைவி ரேவதியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கலியபெருமாள் ரேணுகாவை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு சென்னைக்கு அழைத்துச் சென்று விட்டாராம். இதையடுத்து, மனைவியை காணவில்லை என மீன்சுருட்டி காவல் நிலையத்தில் ராமதாஸ் புகார் அளித்தார். புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இந்நிலையில், கலியபெருமாள் மனைவி ரேவதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எனது கணவர் ரேணுகாவை திருமணம் செய்வதற்கு என்னையும் உடன்படச்சொல்லி, எனது மாமனார் சிவசாமி, மாமியார் கஸ்தூரி, நாத்தனர் கலா, கண்ணகி, கண்ணகி கணவர் ராஜலிங்கம் ஆகியோர் சேர்ந்து என்னை அடித்து துன்புறுத்திவருகின்றனர். நான் ஒப்புக்கொள்ளாததால், எனது தாலி மற்றும் நகைகளை பறித்துக்கொண்டு, எனது கணவர் கலியபெருமாள் ரேணுகாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டார் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வக்குமாரி வழக்குப் பதிந்து கலியபெருமாளை கைது செய்து விசாரித்து வருகிறார்.