அரியலூர் மாவட்டம், வாரணவாசி அருகே மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாரணவாசி அருகே மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, அதன் உபரி நீரை ஏரிகளுக்கும், கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கும் திருப்பிவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில், அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ராஜேந்திரன், மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க. சண்முகசுந்தரம், வேப்பூர் ஒன்றியச் செயலர் மதியழகன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் ஆறுமுகம், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் செபி, ராமகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாய சங்கம் தங்கமலை, லட்சிய தி.மு.க மாவட்டத் தலைவர் வினோத்ராஜ் மற்றும் பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, தமாகா, தேமுதிக, ஐஜேகே உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.