அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் 11 பயனாளிகளுக்கு ரூ.7.80 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்களை அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் வழங்கினார்.
ஆட்சியர் க. லட்சுமிபிரியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று, சம்பா தொகுப்புத் திட்டத்தில் ரூ.75,000 மானியத்தில் 7 பவர் டில்லரும் (விசை உழுவை இயந்திரம்), தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ் ரூ.44,000 மானியத்தில் 2 ரோட்டவேட்டர் கருவியும் (சுழல் கலப்பை) மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ரூ.3,000 மானியத்தில் 2 பவர் ஸ்பிரேயர்களும் (விசை தெளிப்பான்) என 11 விவசாயிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் மா. சந்திரகாசி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், ஆர்.டி.ராமச்சந்திரன், வேளாண் இணை இயக்குநர், சு. அய்யாசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஒ.விஜயலட்சுமி, வேளாண் உதவி இயக்குநர்கள் ரா.பழனிச்சாமி, கண்ணன், ஏ.கே.ரவிச்சந்திரன், வேளாண் அலுவலர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.