அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கன்றுக்குட்டி முட்டியதில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள பா.புத்தூரைச் சேர்ந்தவர் மகாராஜன் (65).
கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரோஜா. இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மீன்சுருட்டியில் நடைபெற்ற வாரச்சந்தைக்கு சென்றனர். அங்கு வீட்டில் வளர்ப்பதற்காக பசுக் கன்று ஒன்றை வாங்கியுள்ளனர்.
பின்னர் சந்தையில் இருந்து வெளியே ஓட்டி வந்த கன்றுக்குட்டி, மகாராஜனை முட்டித் தள்ளியது. இதில் மகாராஜன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகாராஜன் அங்கு சிசிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். மீன்சுருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.