விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் குழந்தைகளுக்கு அவசியம் என்றார் ஆட்சியர் க. லட்சுமிபிரியா.
அரியலூர் லிங்கத்தடி மேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அவர் பங்கேற்று மேலும் பேசியது: விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். தேர்வில் தோல்வி அடைந்தால் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது.
எந்தத் துறையில் திறமை உள்ளதோ அந்தத் துறையில் மேன்மை அடையலாம், பிரகாசிக்கலாம் என்றார் அவர்.
விழாவுக்கு வள்ளலார் கல்வி நிலையத்தின் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் க. முகமது யூனிஸ் கான் பங்கேற்று இலக்கிய மன்றப் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட நன்னடத்தை அலுவலர் க. திருமாவளவன், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் ந. கண்ணையன், ம. இருதயராஜ், புலவர் சி. இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்.
விழாவில் மாணவர்கள் பங்கேற்று, பண்டிதர் ஜவாஹர்லால் நேருவைப் பற்றி எடுத்துரைத்தனர். முடிவில் பள்ளி தலைமையாசிரியர் பெ.செளந்தரராஜன் நன்றி கூறினார். தொடர்ந்து அரியலூர் ஒப்பில்லா அம்மன் கோயில் தெருவிலுள்ள தரம் உயர்த்தப்பட்ட அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் ஆட்சியர் க.லட்சுமிபிரியா பங்கேற்று கொண்டாடினர்.
விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் பெ.ஜெயராணி, அரியலூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் க. அன்பரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுமதி கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி பேசினார்.