சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து அரியலூர் மாவட்டத்திலுள்ள 216 நியாய விலைக் கடைகள் முன்பு திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது விநியோகத் திட்ட சர்க்கரை விலையை தமிழக அரசு அண்மையில் உயர்த்தியதை கண்டித்து தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள 216 நியாய விலைக் கடைகள் முன் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் ரயில் நிலையம் அருகேயுள்ள நியாய விலைக்கடைகள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.எஸ். சிவசங்கரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மா.மு.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
ஜயங்கொண்டத்தில்...
வேலாயுதநகரில் உள்ள கடை முன் திமுக இளைஞரணி மாநில இணைச் செயலர் சுபா. சந்திரசேகர், ஜயங்கொண்டம் அண்ணாநகரில் உள்ள கடை முன் மாவட்டத் துணைச் செயலர் கணேசன், சங்குந்தபுரத்தில் உள்ள கடை முன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தங்க. ராமகிருஷ்ணன், வெள்ளாளர்தெரு கடைமுன் ராஜமாணிக்கம், தா.பழூரில் தா.பழூர் கிழக்கு ஒன்றியச் செயலர் க.சொ.க. கண்ணன், மீன்சுருட்டியில் ஜயங்கொண்டம் வடக்கு ஒன்றியச் செயலர் தனசேகர் தலைமையிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.