தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 1.9.2017 அன்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிஜிட்டல் ஒளிபரப்பு சேவைக்கான MPEG 4 தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தப்பட்ட கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து, டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையைத் தொடக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக, 32,000 செட்டாப் பாக்ஸ்கள் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்களை விலையில்லாமல் வழங்க வேண்டும். மேலும், விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களின் இடத்தில் நிறுவி செயலாக்கம் செய்வதற்காக ரூ. 200 ஒரு முறை மட்டும் பெற்றுக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
விலையில்லா செட்டாப் பாக்ஸ் என்பதால் நிறுவுதல் மற்றும் செயலாக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.200-க்கு மேல் சந்தாதாரர்கள் கூடுதலாக தொகை ஏதும் செலுத்த தேவையில்லை.
இதற்கு மேல் கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911-க்கு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.